Published : 02 Jul 2019 12:45 PM
Last Updated : 02 Jul 2019 12:45 PM

கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழி: கண்டு வியந்த மதுரை இளைஞர்கள்

கீழடியில் கிடைத்த பழங்கால தமிழர் பயன்படுத்திய தாழியைக் கண்டு அகழாய்வு முகாமை சுற்றிப்பார்க்க வந்த மதுரை இளைஞர்கள் வியந்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப்  பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.

தொல்லியல் துறை, அகழாய்வு பகுதியில் பத்து அடி சதுர வடிவத்தில் குழி தோண்டி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

ஐந்தாம் கட்ட ஆய்வுக்கு பதினைந்து தொல்லியல் குழிகள் தோண்டப்படவுள்ளது. கடந்த சில நாட்களாக இரட்டைச் சுவர் மற்றும் பல்வேறு வடிவிலான பானைகள் கிடைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக நேற்று (திங்கள்கிழமை) குழி தோண்டும் போது வட்டவடிவிலான தாழி கிடைத்தள்ளது.

கீழடியில் அகழாய்வு தொடங்கியதிலிருந்து முகாமிற்கு அன்றாடம் ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்து வருகின்றனர். அந்தவகையில் நேற்று மாலை மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் பார்வையிட்டனர்.

இது குறித்து அவர்கள், "2015 ம் ஆண்டிலிருந்து  கீழடி அகழாய்வு முகாமிற்கு பார்வையிட வந்து கொண்டிருக்கிறோம். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இதுகுறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகிறார்.

நாளிதழ்களிலும் அகழாய்வு செய்திகள் வெளிவருகின்றன. அதனால் இங்கு பார்க்க வேண்டும் என்ற ஆவலில் வந்தோம். இங்கு நீளமான இரட்டைச் சுவர், பல்வேறு வடிவிலான பானைகளில் அந்தக்கால மக்கள் பயன்படுத்திய  வட்ட வடிவிலான தாழி ஆகியவற்றைப் பார்க்க வியப்பாக உள்ளது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x