Last Updated : 09 Jul, 2019 12:52 PM

 

Published : 09 Jul 2019 12:52 PM
Last Updated : 09 Jul 2019 12:52 PM

ஆளுநருக்கு அதிகாரமில்லை வழக்கு: மேல்முறையீட்டு விசாரணைக்காக டெல்லியில் முகாமிட்டுள்ள கிரண்பேடி, நாராயணசாமி

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தொடுத்த வழக்கின் விசாரணை நாளை வரவுள்ள நிலையில் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி டெல்லியில் முகாமிட்டுள்ளனர். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துவது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது, பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு முதல்வர், அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவராமல் உத்தரவிடுவது போன்ற விஷயங்களுக்குத் தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆளுநருக்கு அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரமில்லை என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மத்திய அரசும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த ஜூன் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடை விதிக்க மறுத்தது. அத்துடன் ஜூன் 7-ம் தேதி அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்த 21-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 21-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேற்கண்ட உத்தரவுகள் நீடிப்பதாகவும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

அதனடிப்படையில் இவ்வழக்கின் மேல்முறையீடு விசாரணை தொடங்கி தீர்ப்பு வரை ஆளுநர் கிரண்பேடியும், முதல்வர் நாராயணசாமியும் எதிர்நோக்கியுள்ளனர். இவ்வழக்குக்காக டெல்லிக்கு கிரண்பேடி கடந்த 7-ம் தேதி புறப்பட்டுச் சென்றார். இச்சூழலில் முதல்வர் நாராயணசாமியும் நேற்று (திங்கள்கிழமை) இரவு டெல்லி சென்றார். டெல்லியில் இருவரும் முகாமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x