

அமமுகவில் தொடர்ந்து பலரும் விலகி வரும் நிலையில் புதிய நிர்வாகிகளை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். வெற்றிவேல், பழனியப்பன், சி.ஆர்.சரஸ்வதிக்கு முக்கியப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ் இணைப்புக்குப் பின் வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் தலைமையிலான அணி தங்களை அதிமுக அணி என்று கூறி வந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது.
இடைத்தேர்தலில் அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். பின்னர் தேர்தல் நடைமுறைக்காக அமமுக (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) என பெயர் வைத்தார். அதன் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன், கொள்கை பரப்புச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன், அமைப்புச் செயலாளர்களாக செந்தமிழன், பழனியப்பன் உள்ளிட்டோர் இருந்தனர்.
மக்களவைத் தேர்தலில் அமமுக ஒரு இடம்கூட பெற முடியாமல் தோல்வியைத் தழுவினாலும் கணிசமான வாக்குகளைப் பெற்றது. ஆனாலும் 9 எம்.எல்.ஏக்களை வென்றதன் மூலம் அதிமுக ஆட்சி வலுவானது. இதனால் அமமுகவுக்குள் சலசலப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் வெளியேறிய நிலையில் தேர்தலுக்குப் பிறகு பாப்புலர் முத்தையா உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்களே அதிமுகவில் இணைந்தனர்.
தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்தார், இசக்கி சுப்பையாவும் வெளியேறினார். இதையடுத்து அமமுகவில் புதிய நிர்வாகிகளை ஏற்கெனவே அறிவிப்பேன் என அறிவித்திருந்த டிடிவி தினகரன் இன்று நிர்வாகிகள் பட்டியலை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிடிவி தினகரன் விடுத்த அறிவிப்பு வருமாறு:
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகளாக கீழ்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளில் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
துணைப் பொதுச்செயலாளர் :
1. P.பழனியப்பன் (முன்னாள் அமைச்சர், தருமபுரி)
2. M.ரெங்கசாமி (தஞ்சாவூர்)
பொருளாளர் : வெற்றிவேல் (சென்னை)
தலைமை நிலையச் செயலாளர்: R.மனோகரன் முன்னாள் அரசு கொறடா (திருச்சி மாவட்டம்)
கொள்கை பரப்புச்செயலாளர் : C.R.சரஸ்வதி, முன்னாள் சமூக நல வாரியத் தலைவர் (சென்னை).
இவ்வாறு டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.