Last Updated : 05 Jul, 2019 12:00 AM

 

Published : 05 Jul 2019 12:00 AM
Last Updated : 05 Jul 2019 12:00 AM

சேதமடைந்த உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம்; தூத்துக்குடியில் பரிதாப நிலையில் தருவை விளையாட்டு மைதானம்: மாணவர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் வேதனை

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் இறகுபந்து உள் விளையாட்டு அரங்கம் சேதமடைந்ததால் பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. நீச்சல் குளம், நடைபயிற்சி தளம், சுற்றுச்சுவர் ஆகியவையும் சேதமடைந்து காணப்படுகின்றன. கைப்பந்து, கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்களும் இல்லாததால் இங்கு பயிற்சிக்கு வரும் மாணவ, மாணவிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் ஜார்ஜ் சாலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் தருவை விளையாட்டு மைதானம் அமைந் துள்ளது, . விளையாட்டு விடுதி, இரண்டு உள்விளையாட்டு அரங்கங் கள், நீச்சல் குளம், நடைபயிற்சி தளம், டென்னிஸ் மைதானம் உள்ளி ட்ட பல்வேறு வசதிகள் இங்கு உள்ளன. இந்த மைதானத்தில் தினமும் காலையும், மாலையும் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்கின்றனர். ஏராளமானோர் நடைபயிற்சி செய்வதுடன், பல்வேறு விளையாட் டுகளையும் விளையாடுகின்றனர்.

உள்விளையாட்டு அரங்கம்

ஆனால், அரசின் பாராமுகத்தால் தருவை விளையாட்டு மைதானம் சீர்குலைந்து வருகிறது. இந்த மைதானத்தில் இரண்டு உள்விளையாட்டு அரங்குகள் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு தன்னிறைவு திட்டத்தின் கீழ், ரூ.70 லட்சம் செலவில் தனியார் நிறுவன நிதியுதவியுடன் பொதுப் பணித்துறையால் அமைக்கப்பட்டன. இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தில் மரத்தால் உருவாக்கப்பட்ட தளம் சிதைந்து விட்டது.

இந்த அரங்கம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே சேதமடையக் காரணம் என விளையாட்டு ஆர்வலர்கள் குற்றம் காட்டுகின்றனர்.

நீச்சல் குளம்

இதேபோல் மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில், அடிப்பகுதியில் பதிக்கப்பட்ட ஓடுகள் ஆங்காங்கே உடைந்தும், பெயர்ந்தும் காணப்படுகின்றன. இதனால் வீரர்கள் நீச்சல் பயிற்சி செய்வதில் இடையூறு ஏற்படுகிறது. இந்த நீச்சல் குளம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் ரூ. 8 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. குறுகிய காலத்துக்குள் சேதமடைய தரமற்ற பணி தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

மைதானத்தின் நடைபயிற்சி தளம் சேதம், சுற்றுச்சுவர் சேதம், கைப்பந்து, கபடி போன்ற முக்கிய விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் இல்லாதது என இங்கே நிலவும் குறைகளை விளையாட்டு ஆர்வலர்கள் பட்டியலிடுகின்றனர்.

அரசின் பாராமுகம்

இதுகுறித்து தருவை மைதானத்தில் கடந்த 30 ஆண்டுகளாக நடைபயிற்சி செய்து விளையாட்டு ஆர்வலர் சி.கந்தசாமி கூறும்போது, ‘‘இந்த விளையாட்டு மைதானத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. சேதமடைந்த பகுதியை சீரமைக்க முன்வருவதில்லை. இதனால் இளம் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

மழை காலத்தில் மைதானம் முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கிவிடும். முறையான வடிகால் வசதி இல்லை. கூட்டம், கூட்டமாக வரும் மைதானத்துக்குள் உலா வரும் தெருநாய்களால் பயிற்சி செய்ய முடியாமல் மாணவ, மாணவிகள் திண்டாடுகின்றனர்.

எனவே, அரசு உடனடியாக கவனம் செலுத்தி உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், நடை பயிற்சி தளம் போன்றவற்றை சீரமைக்க வேண்டும். மேலும், அனைத்து விளையாட்டுகளுக்கும் பயிற்சியாளர் களை முறையாக நியமிக்க வேண்டும்’’ என்றார்.

விரைவில் சீரமைப்பு

இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சேதமடைந்த இறகுபந்து உள்விளையாட்டு அரங்கத்தை சீரமைக்கவும், சுற்றுச்சுவர் கட்டவும், கூடுதலாக ஒரு ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், என்எல்சி நிறுவனம் ரூ.44 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பாக அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்ததும் பணிகள் செய்யப்படும்.

நீச்சல் குளத்தை சீரமைக்க இப்போது அரசிடம் நிதி கோர முடியாது. வேறு ஏதாவது நிதியை பெற்று சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 850 மீட்டர் நீளம் கொண்ட நடைபயிற்சி தளத்தில், புதிதாக டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்ட பகுதியில் 25 மீட்டர் அளவுக்கு மட்டும் சேதமடைந்துள்ளது. இதனால் பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும் அதை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எத்தனை விளையாட்டு பயிற்சியாளர்கள் தேவை என்ற விவரத்தை அரசு கேட்டுள்ளது. எனவே, விரைவில் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x