எழுவர் விடுதலை: ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

எழுவர் விடுதலை: ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் உள்ளது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவையின் பரிந்துரை, ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

கடந்த எட்டு மாதங்களாக இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்த போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர் அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எட்டு மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்துத் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது.

அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காத காரணத்தினால் மனுதாரர் உள்ளிட்ட ஏழு பேரும் பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் எனவும் அவர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் அவருக்கு சட்டப் பாதுகாப்பு இருப்பதாகவும் வாதிட்டார். மேலும் 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய இருதரப்பினருக்கும் உத்தரவிட்டு, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா இல்லையா என்பது குறித்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in