Published : 25 Nov 2014 10:26 AM
Last Updated : 25 Nov 2014 10:26 AM

சம்பா சாகுபடிக்கு 1.60 லட்சம் டன் யூரியா இறக்குமதி: தமிழக அரசு உடனடி நடவடிக்கை

நடப்பு சம்பா பருவ சாகுபடிக்கான உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க, ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் யூரியாவை தமிழக அரசு இறக்கு மதி செய்துள்ளது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரம் டன் யூரியாவை, கூட்டுறவு வேளாண் மையங் கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கரீப் எனப்படும் கார்கால சாகுபடி முடிந்து, ரபி என்ற கோடை கால சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடங்கியுள்ளன. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இந்த சாகுபடி காலத்தில், பயிர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் உரம் இடவேண்டும். இதற்காக அரசின் கூட்டுறவு வேளாண் மையங்கள் மூலம் உரம் விநியோ கம் செய்யப்பட வேண்டும்.

கார்கால சாகுபடிக்கே உரம் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், சம்பா சாகுபடிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது. மாவட்டங்களில் நடந்த விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டங்களில், உரத் தட்டுப் பாட்டை போக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. பல இடங் களில் போராட்டங்களும் நடத்தப் பட்டன.

தமிழக அரசுக்கு நிறைய புகார் கள் வந்ததன் பேரில், வேளாண் துறை போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, வெளிநாடுகளில் இருந்து யூரியா உரத்தை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்துள்ளது. உக்ரைன் மற்றும் ஓமன் நாட்டிலிருந்து அதிக அளவுக்கு யூரியா இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் டன் யூரியா உரம் தேவைப்படுகிறது. இதில் மத்திய அரசின் சார்பில் 60 சதவீதம் விநியோகிக்கப்படும். மீத முள்ள 40 சதவீத உரம் தமிழகத் தில் ஸ்பிக், மணலி உரத் தொழிற் சாலை மற்றும் மங்களூர் உரத் தொழிற்சாலைகளில் இருந்து கிடைக்கும். தற்போது நாப்தா பிரச்சினையால் உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள் ளன. இதனால், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் உரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை சரிக்கட்ட வெளிநாடு களில் இருந்து யூரியா இறக்குமதி செய்துள்ளோம். நடப்பு சம்பா சாகுபடிக்கு மத்திய அரசின் விநி யோகம் போக, முதலில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டன் உரம் தேவைப்படுகிறது. ஆனால், அரசு கூடுதலாக 10 ஆயிரம் டன் கணக்கிட்டு, ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் இறக்குமதி செய்துள்ளது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் டன் உரம் இறக்குமதி செய்யப்பட்டு, மாவட்ட வேளாண் கூட்டுறவு மையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் தொடங்கி விட்டன.

27 ஆயிரம் டன் யூரியா, காரைக் கால் சிறு துறைமுகத்தில் இறக்கு மதியாகி, அங்கு மூட்டைகளாக கட்டும் பணிகள் நடந்து வரு கின்றன.

காக்கிநாடாவில் இருந்து இன்னும் 15 ஆயிரம் டன், மங்களூரிலுள்ள இந்திய விவசாயிகள் கூட்டுறவு உரத் தொழிற்சாலையில் இருந்து 8 ஆயிரம் டன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவை விரைவில் வேளாண் கூட்டுறவு மையங்களுக்கு வந்துவிடும்.

எனவே, விவசாயிகள் அச்சப் படத் தேவையில்லை. நடப்பு சம்பா சாகுபடிக்கு தேவையான அளவுக்கு கூட்டுறவு வேளாண் மையங்கள் மூலம் உரம் விநியோகம் செய்யப்படும். அதே நேரத்தில், உரத்தைப் பதுக்கி வைத்து அடுத்தகட்டத்துக்கு சேமித்து வைக்க வேண்டாம் என விவசாயிகளை வலியுறுத்தியுள் ளோம்.

எனவே, கூட்டுறவு மையங்களில் அவரவர் தேவைக்கேற்ப ரேஷன் முறையில் மட்டுமே உரம் விநியோகிக்கப்படும். உரத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பதைத் தடுக்க வேளாண் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தனிப்படை அமைத்து, ஆங்காங்கே சோதனை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x