Published : 06 Jul 2019 05:18 PM
Last Updated : 06 Jul 2019 05:18 PM

வசியம் செய்வதாகக் கூறி பாலியல் ரீதியாக துன்புறுத்திய சாமியார்: மதுரை துணை ஆணையரிடம் பெண் காவலர் புகார்

பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்துவைக்க வசியம் செய்ததாகக் கூறி சாமியார் ஒருவரும் தனக்கு அறிமுகமான வேறு இரண்டு ஆண்களும் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக மதுரையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறார்.

மதுரை தல்லாகுளம் காவல் நிலைய பெண் காவலர் எஸ்.சந்தானலெட்சுமி (29). இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம். இவருக்கும் மதுரை அவனியாபுரம் அயோத்தி மகன் சீனிவாச பெருமாளுக்கும் கடந்த 28.5.2007ல் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும், ஆண் குழந்தையும் உள்ளனர். 

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். சந்தானலட்சுமியின் கணவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்துவைக்க வசியம் செய்ததாகக் கூறி சாமியார் ஒருவர் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக சந்தானலட்சுமி இன்று மாநகர காவல்துறை துணை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

நடந்தது என்ன?

சந்தானலட்சுமி சார்ந்த சாதி சங்கத் தலைவரான ஏ.கே.பூமிநாதன் மற்றும் தல்லாகுளம் முன்னாள் கவுன்சிலரான ஆறுமுகம் ஆகிய இருவரும் சாதிய ரீதியாக அவரது பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறியுள்ளனர். இதன் நிமித்தமாக சந்தானலட்சுமி ரூ.1.50 லட்சம் பணமும் செலவழித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று 5-ம் தேதி காந்தி மியூசியம் அருகே பூங்கா முருகன் கோயிலை ஒட்டியுள்ள விடுதியில் மதியம் 12 மணி முதல் 1.30 மணிவரை சந்தானலட்சுமியை பூமிநாதன் சந்தித்துள்ளார். சாமியார் என ஒருவரை அறிமுகப்படுத்தி, வசியம் செய்து சந்தானலட்சுமியையும் அவரது கணவரையும், சேர்த்து வைப்பதாக பூமிநாதன் கூறியுள்ளார்.

அதற்காக கணவரின் சட்டை, காலடி மண் எடுத்துக்கொண்டு ரூ.50 ஆயிரம் பணத்துடன் வருமாறு கூறியுள்ளார்.  மாலை 6 மணியளவில் அந்த ஹோட்டலுக்கு சந்தானலட்சுமி சென்றபோது அங்கு பூமிநாதன், ஆறுமுகம், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சாமியார் ஜோதி ஆகியோர் இருந்துள்ளனர். 

பூஜை பொருட்கள் வாங்க கீழமாசி வீதி கடைக்கு ரூ. 2 ஆயிரம் பணத்தோடு காரில் சென்றபோது,  பூஜை பொருள்கள் வாங்கும் சமயத்தில், சாமியார் அருள்வந்து ஆடி கேரளாவிற்கு இன்றைக்கு வேண்டாம் எனச் சொல்லி மீண்டும் விடுதிக்கே திரும்பியுள்ளனர். பின்னர், காந்தி மியூசியம் அருகில் காரில் வந்தபோது தடங்கலாக உள்ளது எனக்கூறி சாமியார் சந்தானலட்சுமியின் மீது மை போன்ற ஒரு பொருளை தடவியுள்ளார்.

அதன்பின் சுமார் இரவு 10.30 மணிக்கே சந்தானலட்சுமிக்கு சுயநினைவு வந்துள்ளது. தனது ஆடை கலைந்திருந்த நிலையில்  தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் நிகழ்ந்ததை உணர்ந்துள்ளார்.

பின்னர்,  இரவு 10.50 மணிக்கு வீட்டுக்கு சென்றபோது தொலைபேசியில் பூமிநாதன் தந்தை கரந்தமலை எனக்கூறி பேசிய நபர், நடந்தவற்றை வெளியே சொன்னால் அவருக்குத் தெரிந்த கஞ்சா வியாபாரிகளை வைத்து சீரழித்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனை சுட்டிக்காட்டியே தன்னை ஏமாற்றிய சாமியார், மற்றும் பணம் பறித்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சந்தானலட்சுமி மனு அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x