Published : 08 Jul 2019 11:22 AM
Last Updated : 08 Jul 2019 11:22 AM

வைகோ எம்.பி.யானதும் முதல் உரையில் என்ன பேச வேண்டும்?- பொன்.ராதாகிருஷ்ணன் எதிர்பார்ப்பு

வைகோ எம்.பி.யானதும் மாநிலங்களவையில் ஆற்றும் முதல் உரையில், திமுக- காங்கிரஸ் கூட்டணி ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் இழைத்த துரோகத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ’’வைகோ மிகச்சிறந்த பேச்சாளர். காரணங்களுடன் கருத்துகளை எடுத்துரைப்பதில் அவருக்கு நிகர் யாருமில்லை. வைகோவின் வேட்பு மனு மீது என்ன முடிவு எடுக்கப்படும் என்று தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

வைகோ நாடாளுமன்றத்துக்குச் செல்லும்போது, ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கான பின்னணி குறித்து வைகோ பேசுவார் என்று எண்ணுகிறேன். அதில் காங்கிரஸ் அரசு என்னென்ன துரோகம் செய்தது, திமுக அரசு செய்த துரோகங்கள் குறித்து வைகோ பேசவேண்டும்.

அவை தமிழ்நாட்டில் இருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டும் என்று தன் ஆழ் மனதிலிருக்கும் வேகத்தோடு, வைகோ பேசுவார். அதுவும் தனது முதல் நாடாளுமன்றப் பேச்சிலேயே எடுத்து வைப்பார் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x