Last Updated : 07 Jul, 2019 09:45 AM

 

Published : 07 Jul 2019 09:45 AM
Last Updated : 07 Jul 2019 09:45 AM

பருவ மழை தவறியதால் கண்ணீர் வடித்த விவசாயிகள்; கைகொடுத்த மலை வேம்பால் செழித்த விவசாயம்

சேலம் மாவட்டத்தில் மக்காச்சோளம், மரவள்ளி, கடலை, நெல், மஞ்சள், பாக்கு, கரும்பு, மலர் வகை என பலதரப்பட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். கடந்த சில ஆண்டாக பருவ மழை தவறியதால், வேளாண் தொழில் நசிந்து, விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அவ்வப்போது பெய்யும் மழையை நம்பி சிறு, குறு விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், பயிர்கள் கருகி, உழவுக்கு கூட கட்டுப்படியாகாத நிலையில், விவசாய குடும்பங்கள் வருவாய் இழந்து தவிக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் விவசாய தொழிலுக்கு புத்துயிர் ஊட்டும் விதமாக வேளாண் காடு வளர்ப்பு திட்டம் விவசாயிகளிடையே நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பரவலாக விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் மலைவேம்பு, சவுக்கு உள்ளிட்ட மரங்களை வளர்த்து, அதன் மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

சேலம், பனமரத்துப்பட்டி, அடிக்கரை பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபி கண்ணன் கூறியதாவது:

பருவ மழை தவறியதால், தண்ணீரின்றி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 500 மலை வேம்பு செடிகள் இலவசமாக வனத்துறை மூலம் அளித்தனர். மேலும், இச்செடிகளை பராமரித்து, நடவு செய்ய ரூ.ஆயிரம் நிதி உதவியும் வழங்கினர். இரண்டு ஏக்கரில் 500 மலை வேம்பு வளர்த்து வருகிறேன். ஒரு செடி கூட பட்டுப் போகாமல் செழுமையாக வளர்ந்து வருகிறது. இதற்கு தண்ணீர் தேவையில்லை, பராமரிப்பு செலவு, கூலியாட்கள் செலவு ஏதுவும் இல்லாத விவசாய தொழிலாக அமைந்துள்ளது. மூன்று ஆண்டு வளர்ந்த மரம் காகித ஆலைக்கும், ஆறு ஆண்டு வளர்ந்த மரங்களை தீக்குச்சி, பலகைக்காக மர ஆலை உரிமையாளர்களும் வாங்கிச் செல்கின்றனர். வேளாண் காடுகளுக்கு இடையே ஊடு பயிராக அரளி, அவரை கொடி ஆகியன வளர்த்து, அதன் மூலமும் கணிசமான வருவாய் ஈட்ட முடிகிறது. தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும் தொழிலாக வேளாண் காடு வளர்ப்பு திட்டம் விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சந்தியூர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் கூறியது:

மத்திய அரசு நீர் மேலாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்படி ஜல் சக்தி அபியான் திட்டத்துக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்து, வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தை ஊக்கப்படுத்தி வருகிறது. வேளாண் காடு வளர்ப்பு மூலம் விவசாயிகள் தண்ணீரை நம்பி தொழில் செய்ய வேண்டிய அவசியமில்லை. மேலும், காடு பரப்பளவு அதிகரிக்கும்போது, சுற்றுச்சூழல் காக்கப்படுவதுடன், நல்ல மழை வளமும் கிடைக்கும். வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில் சவுக்கு, தேக்கு, மலைவேம்பு, குமிழ், வில்வம், பூவரசு, ரெட் சான்டல் உள்ளிட்ட மரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, மானிய உதவியை அரசு வழங்கி வருகிறது.

மரங்கள் நன்கு வளர்த்த நிலையில், அவை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. இதன் காரணமாக சேலம் மாவட்டம் முழுவதும் விவசாயிகள் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் மூலம் நல்ல தொழில் வளமும், வருமானமும் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x