Published : 04 Jul 2019 04:28 PM
Last Updated : 04 Jul 2019 04:28 PM

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை அரசே நேரடியாக தத்தெடுத்துக் கொள்ள வேண்டும்: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை அரசே நேரடியாக தத்தெடுத்துக் கொள்ள வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே. பாலகிருஷ்ணன் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. ஏற்கெனவே நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவப் படுகொலைகள் நடந்து வந்துள்ள சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் ஒருவரை ஒருவர் விரும்பி சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், விஷ்ணுபிரியா தம்பதியினர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலையில் சிந்தப்பட்ட ரத்தம் காய்வதற்கு முன்னரே நேற்று இரவு தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் கிராமம், தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த, 4 மாதங்களுக்கு முன்னால் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட சோலை ராஜா, ஜோதி தம்பதியினர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் உள்ள இரண்டு உள்சாதி பிரிவுகளைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 சாதிய ஆணவ மனோபாவம் அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களிலும் மனிதாபிமானமற்றவர்களை உருவாக்குகிறது என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும்.

தமிழ்ச் சமூகத்தில் நிலவும் இத்தகைய சாதி ஆணவ மனோபாவம் மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்டதாகும். இத்தகைய சாதி ஆணவ மனோபாவத்தை வேரோடு அழித்திட அனைத்து ஜனநாயக நல்லெண்ணம் கொண்டவர்களும் முன்வர வேண்டும்.

தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதி ஆணவப் படுகொலை நடந்த போதும், இப்படுகொலைகளைத் தடுத்து நிறுத்திட தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ந்து வற்புறுத்தப்பட்ட பின்னரும் தமிழக அரசு அமைதி காத்து வருவது வன்மையான கண்டத்திற்குரியதாகும்.

மேலும், சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்துவது பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாதது ஆணவக் கொலைகளுக்கு ஆதரவான போக்கினை அரசு மேற்கொள்கிறதோ என்ற கருத்துக்கு வலு சேர்ப்பதாக உள்ளது.

எனவே, உடனடியாக ஆணவக்கொலைகளைத் தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்ற வேண்டும். சாதி ஆணவச் சிந்தனைப்போக்கை வேரறுக்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசே மேற்கொண்டு நடத்த வேண்டும். சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களை அரசே நேரடியாக தத்தெடுத்துக் கொண்டு அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பது, அரசு வேலை வழங்குவது, தொழில் தொடங்க கடன் வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்", என கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x