Published : 02 Jul 2019 01:37 PM
Last Updated : 02 Jul 2019 01:37 PM
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்பாக வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் எனவும் அந்நிறுவனத்தின் தமிழ்நாடு தொலைதொடர்பு வட்ட தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "பிஎஸ்என்எல் நிறுவனம் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானதாகும். அதுபோன்ற திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை. கடுமையான போட்டியின் விளைவாக கட்டணங்கள் வெகுவாக குறைக்கப்பட்டது.
அதனால் கடந்த சில மாதங்களாக நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து நிறுவனத்தை மீட்க மத்திய அரசு ஒரு திட்டம் தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
பிஎஸ்என்எல் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு சேவை அளிப்பது மட்டுமின்றி இந்திய ராணுவத்திற்கும் தொலைதொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது.
மேலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடர் காலங்களிலும் தொடர்ந்து பொதுமக்களுக்கு தொலைதொடர்பு சேவை வழங்கும் ஒரே நிறுவனமாகவும், நம் நாட்டின் அத்தியாவசியமான தொலைதொடர்பு நிறுவனமாகவும் பிஎஸ்என்எல் விளங்குகிறது என மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஆகவே பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவையை அளித்து வரும் எனவும், வெளிப்படையான மற்றும் சிறந்த சேவையை மிகக்குறைவான கட்டணத்தில் வழங்குவது தொடரும். பிஎஸ்என்எல் குறித்து வெளியாகும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT