Last Updated : 12 Jul, 2019 05:01 PM

 

Published : 12 Jul 2019 05:01 PM
Last Updated : 12 Jul 2019 05:01 PM

முதல்வருக்கே அதிகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பதில் அளிக்காத ஆளுநர் கிரண்பேடி

தீர்ப்பை முழுதாக படிக்க வேண்டும். தற்போது கருத்து கூற முடியாது என்று கிரண்பேடி தெரிவித்தார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுனர் கிரண்பேடி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தவது, தன்னிச்சையாக அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பது, பல பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டு முதல்வர், அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு வராமல் உத்தரவிடுவது போன்ற விஷயங்களுக்கு தடை விதிக்கக்கோரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆளுநருக்கு அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரமில்லை என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி மத்திய அரசும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த ஜூன் 4-ம் தேதி இந்த வழக்கு விசாரணையின்போது உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்தது. அத்துடன் ஜூன் 7-ம் தேதி அமைச்சரவையின் முடிவுகளை அமல்படுத்த 21-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 21-ம் தேதி விசாரணைக்கு வந்த போது மேற்கண்ட உத்தரவுகள் நீடிப்பதாகவும், இந்த வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். பின்னர் 12-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்காக கடந்த பல நாட்களாக டெல்லியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முகாமிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆளுநரின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் கேட்டதற்கு, "தீர்ப்பை முழுதாக படிக்க வேண்டும். மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு தொடர்பாக தற்போது ஏதும் கருத்து கூற முடியாது. புதுச்சேரி மக்கள் நலனில்தான் எனக்கு முன்னுரிமை" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x