Last Updated : 04 Jul, 2019 04:52 PM

 

Published : 04 Jul 2019 04:52 PM
Last Updated : 04 Jul 2019 04:52 PM

நூறு வயது சுதந்திர போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நூறு வயது சுதந்திர போராட்ட தியாகிக்கு ஓய்வூதியம் வழங்க மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஐ.காளியன் (100). இவர், தமிழக அரசின் தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்று வருகிறார். மத்திய அரசின் ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் உயர் நீதிமன்ற கிளையில் காளியன் வழக்கு தொடர்ந்தார்.

இவரது மனுவை விசாரித்து காளியனுக்கு மத்திய அரசின் தியாகி ஓய்வூதியம் வழங்க 30.10.2018ல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி மத்திய அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்து நேற்று பிறப்பித்த உத்தரவு:

ஆங்கிலேயர் ஆட்சியில் போராடி வெற்றிப்பெற்ற மனுதாரர், சுதந்திர இந்தியாவின் ஆட்சியர்களிடம் ஓய்வூதியத்துக்காக சிக்கி தவிப்பது துரதிஷ்டவசமானது. ஆங்கிலேய அரசுக்கு எதிராக 40 வயதுகளில் போராடி சாதித்த மனுதாரரால் தற்போதைய ஆட்சியாளர்களுடன் 90 வயதுகளில் நடத்தும் போராட்டத்தில் வெற்றிப்பெற முடியவில்லை.

சிறையிலிருந்ததற்கான ஆவணங்களை மனுதாரர் தரவில்லை என மத்திய அரசு சொல்கிறது. இவ்வளவு நாளுக்குப் பிறகு சிறை ஆவணங்களை எடுப்பது கடினம். சிறையில் உடனிருந்த சிறைவாசிகள் அளித்த சான்றிதழ்களே போதுமானது. அதீத தொழில்நுட்ப காரணங்களைக் கூறி தியாகி ஓய்வூதியம் வழங்க மறுக்கக்கூடாது.

இதனால் தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் மனுதாரருக்கு  21.10.2014 முதல் தியாகிகளுக்கான ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும். மத்திய அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x