Published : 08 Jul 2019 12:00 AM
Last Updated : 08 Jul 2019 12:00 AM

பெற்றோருக்கு முறையான தகவல்கள் கிடைப்பதில்லை. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பெற முடியவில்லை: அனைத்து அங்கன்வாடிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தகவல்

ஆதார் பதிவு தொடர்பாக பெற்றோருக்கு உரிய தகவல் கிடைக்காததால், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பெற முடிவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சமூகநலத் திட்டங்களை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக, கடந்த 2010-ம் ஆண்டு முதல், பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை வழங்கும் பணிகளை இந்திய தனி அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 5 வயதுக்கு மேற்பட்ட 7 கோடியே 64 லட்சம் பேரில் 7 கோடியே 16 லட்சம் பேருக்கு (93.6 சதவீதம்) ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 வயதுக்கு உட்பட்ட 55 லட்சத்து 96 ஆயிரம்குழந்தைகளில், 29 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

திருப்தி இல்லை

5 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் பதிவு மேற்கொள்ள அரசு இ-சேவை மையங்கள், அஞ்சலகங்கள், பொதுத்துறை வங்கிகளில் வசதிகள் உள்ளன. ஆனால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவுசெய்ய மையங்கள் இல்லை. இதற்கு முன்பு குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்நிறுவனங்களின் சேவையில் யுஐடிஏஐ நிறுவனத்துக்கு திருப்தி இல்லை.

இதைத் தொடர்ந்து தமிழக அரசின்ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மூலம், அங்கன்வாடிகளில் ஆதார் பதிவு செய்யும் சேவைக்கு யுஐடிஏஐ நிறுவனம் அனுமதி வழங்கியது.

அந்தச் சேவையை தமிழகம் முழுவதும் உள்ள 434 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் முதல்வர் பழனிசாமி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்துக்காக அரசு ரூ.19 கோடியே 53 லட்சம் ஒதுக்கியுள்ளது.

மழலையர் வகுப்பில் சேர்க்க....

தற்போது குடும்ப அட்டைகளில் குழந்தைகள் உட்பட அனைவரது ஆதார் விவரங்களையும் அளிக்கவேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பில் சேர்க்கவும், அங்கன்வாடிகளில் சத்துணவு மாவு, முட்டை போன்றவற்றைப் பெறவும் ஆதார் கேட்கப்படுகிறது. இந்நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? யாரை? எங்கு அணுகுவது? என்பது குறித்து அங்கன்வாடிகளில் பெற்றோருக்கு தெளிவான தகவல்கள் தரப்படுவதில்லை. இதனால் குழந்தை களுக்கு ஆதார் பெற முடியாமல் பெற்றோர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையர் அலுவலகத்தில் கேட்டபோது அதிகாரிகள் கூறியதாவது:

இத்துறை சார்பில் கடந்த 7 மாதங்களில்சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 75,000 குழந்தைகளுக்கு ஆதார் அட்டை கிடைத்துள்ளது.

மேலும் சுமார் 25 லட்சம் குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அங்கன்வாடி மையங்களில்...

குழந்தைகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள்ள விரும்பும் பெற்றோர், அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பதிவுசெய்துகொள்ளலாம். அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பணியாளர் அப்பகுதிக்கு வந்து ஆதார் பதிவை மேற்கொள்வார். பெற்றோருக்கு உரிய தகவல் வழங்குவது தொடர்பாக அனைத்து அங்கன்வாடிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

குழந்தைகளுக்கு ஆதார் பெறுவது எப்படி?

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கை விரல் ரேகை, கருவிழிப் படலம் ஆகியவை பதிவு செய்யப்படாது. குழந்தைகளின் பிறப்புச் சான்று, பெற்றோரின் ஆதார் எண் ஆகியவற்றை டேப்லெட் கணினியில் பதிவு செய்து, அதன் மூலம் குழந்தைகளின் படம் எடுக்கப்பட்டு, பின்னர் ஆதார் அட்டை வழங்கப்படும். குழந்தை 5 வயதை நிறைவுசெய்த பின், அந்த குழந்தையின் கை விரல் ரேகை, கருவிழிப் படலத்தை, ஆதார் மையங்களில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x