Published : 04 Jul 2019 03:20 PM
Last Updated : 04 Jul 2019 03:20 PM

ஸ்டாலின் மீது முதல்வர் பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழக முதல்வர் சார்பில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய ஸ்டாலின், முதல்வர் குறித்து, அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், முதல்வர் பழனிசாமி சார்பில் தமிழக அரசு வழக்கறிஞர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மு.க.ஸ்டாலின் ஜூலை 5-ல் ஆஜராக செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சம்மனை எதிர்த்தும், அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், தன் பேச்சு குறித்து அவதூறு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என்றும் மு.க.ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ''முதல்வர் பழனிசாமி குறித்துப் பேசியதற்காக ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை'' என வாதிட்டார்.

இதற்குப் பதிலளித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன்,  "எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டுப் பேசியிருந்தால், ஸ்டாலின் மீது அரசு வழக்கறிஞர் சார்பில் வழக்கு தொடர முடியாது என்றும், ஆனால் தமிழக முதல்வர் என குறிப்பிட்டு ஸ்டாலின் பேசி இருப்பதால் அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளது'' என்றும் வாதிட்டார். 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட்டார்.

மேலும், இதுபோன்று அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என பல கட்சியினர் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஜூலை 8-ம் தேதி பட்டியலிட அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x