

ஓய்வூதியம் மற்றும் பிராவிடண்ட் பண்ட் கணக்குகளுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கிய உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சேமநல நிதியம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் பிராவிடண்ட் பண்ட் கணக்குகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் சேமநல நிதி அமைப்பு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தனியார் நிறுவன ஊழியரான எலிசா எபிநேசர், என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், “ஆதார் எண்ணை அரசின் நலத் திட்டங்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கி கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக, நலத்திட்டம் அல்லாத சேமநல நிதியத்திற்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்குவது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, மனுவுக்கு சேம நல நிதியம் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.