Published : 08 Jul 2019 09:58 AM
Last Updated : 08 Jul 2019 09:58 AM

வேலூர் மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி: சீமான் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என, அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவும் முன்பு அறிவித்த கதிர் ஆனந்தை வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில், "நடக்கவிருக்கிற வேலூர் மக்களவைத் தொகுதிக்கானத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவார்.

கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்றுத் தங்களது அளப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டும்", என சீமான் தெரிவித்துள்ளார்2

ஏற்கெனவே நடைபெறவிருந்த வேலூர் தொகுதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x