Published : 11 Jul 2019 04:11 PM
Last Updated : 11 Jul 2019 04:11 PM
தமிழகத்தில் இருந்து அதிமுக, திமுக சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிட்ட 6 பேரும், போட்டியின்றி தேர்வாகி உள்ளனர்.
தமிழகத்திலிருந்து கடந்த 2013-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கனிமொழி (திமுக), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), வி.மைத்ரேயன்(அதிமுக), டி.ரத்தினவேல் (அதிமுக), கே.ஆர்.அர்ஜுனன் (அதிமுக), ஆர்.லட்சுமணன் (அதிமுக) ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் முடிகிறது.
அதையடுத்து புதிய மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. தற்போதுள்ள நிலையில் அதிமுக மற்றும் திமுகவுக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் தலா 3 மாநிலங்களவை எம்பிக்களை தேர்வு செய்யும் தகுதி உள்ளது.
திமுக போட்டியிடும் மூன்று இடங்களில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், திமுக வழக்கறிஞர் அணி தலைவர் வில்சன் ஆகியோரும், மீதமுள்ள ஒரு இடத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் போட்டியிட்டனர். தேச துரோக குற்றச்சாட்டில் வைகோ தண்டனை பெற்றதால், அவருக்கு மாற்றாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த என்.ஆர்.இளங்கோவும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வைகோவின் மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி ஏற்றுக்கொண்டதால், என்.ஆர்.இளங்கோ தனது மனுவை வாபஸ் செய்துவிட்டார்.
அதேபோல அதிமுக கூட்டணியில் பாமக சார்பாக அக்கட்சியின் இளைஞணித் தலைவர் அன்புமணி, அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான அ.முஹம்மத் ஜான், மேட்டூர் நகர அதிமுக செயலாளர் என்.சந்திரசேகரன் ஆகிய 3 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.
மாநிலங்களவைக்கான 6 காலி இடங்களுக்கு 6 பேர் போட்டியிட்டதால், சிக்கல் எதுவும் ஏற்படவில்லை. இதனால் 6 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் தலைமைச் செயலகத்தில் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து 6 பேரும், அதற்கான சான்றிதழ்களை சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT