Last Updated : 01 Jul, 2019 02:52 PM

 

Published : 01 Jul 2019 02:52 PM
Last Updated : 01 Jul 2019 02:52 PM

தமிழக மக்களை விமர்சித்த கிரண்பேடி: மன்னிப்பு கோரும் வரை போராட்டம்; புதுவை திமுக அறிவிப்பு

தமிழக மக்களை விமர்சித்துள்ள புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து அவர் மன்னிப்பு கோரும் வரை போராட்டம் நடத்த உள்ளதாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா தெரிவித்துள்ளார். நாளை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

சென்னை தற்போது கடும் வறட்சியைச் சந்தித்து வரும் நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சமூக வலைதளத்தில், ''இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. இதே நகரம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளத்தில் முழ்கியது.

மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட காரணமாக உள்ளது'' என்று குறிப்பிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை (செவ்வாய்க்கிழமை) ஆளுநர் மாளிகையை நோக்கி கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என புதுச்சேரி திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான சிவா தெரிவித்தார்.

மேலும், ஆட்சியைக் காப்பாற்றுவதிலேயே குறியாக உள்ள அதிமுக இவ்விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் வாய்மூடி மவுனமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x