Last Updated : 03 Feb, 2014 10:07 AM

 

Published : 03 Feb 2014 10:07 AM
Last Updated : 03 Feb 2014 10:07 AM

எனது நிலை தெரிந்தால் முதல்வர் நிச்சயம் வாய்ப்பு அளிப்பார்: புதுச்சேரி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேதனை

பிழைக்கப் போன இடத்திலும் அரசியல் முகவரியை தொலைத்து விட்டு சொந்த ஊரிலும் கட்சியில் அங்கீகாரம் கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார் புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த கோ.ஆடூரைச் சேர்ந்தவர் கே.அன்பழகன். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர், 22 வயதில் புதுச்சேரிக்கு சென்று தங்கிவிட்டார். புதுச்சேரி மாநில அதிமுக-வில் மாநில இளைஞரணி துணைச் செயலாளராக வளர்ந்த இவர், 1985-ல் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். ஜெ. அணியின் மாநில இணைச் செயலாளராக இருந்தவர், மீண்டும் ஒன்றுபட்ட அதிமுக-வில் மாநில துணைச் செயலாளர் பொறுப்புக்கு வந்தார்.

இந்த நிலையில், 1967-க்கு முன் புதுச்சேரியில் குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே புதுச்சேரி மாநில தேர்தல்களில் போட்டியிட முடியும் என்ற சட்டம் கடந்த 1993-ல் இயற்றப்பட்டதால், அன் பழகனுக்கு சிக்கல் ஏற்பட்டது. இனிமேல் புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற முடிவுக்கு வந்தவர், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊரான கோ.ஆடூருக்கு வந்து நிரந்தரமாக தங்கிவிட்டார். இங்கே அவரை கட்சியில் சேர்த்துக் கொண்ட அதிமுகவினர், வேறெந்த பொறுப்பும் தரமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.

தனது ரெண்டும் கெட்டான் நிலை குறித்து ‘தி இந்து’வுக்கு பேட்டியளித்த அன்பழகன், “புதுச் சேரி மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராகப் பத்து ஆண்டுகள் இருந்திருக்கிறேன்.

கட்சி பிளவுபட்டு இக்கட்டான சூழல் ஏற்பட்ட சமயத்தில் அம்மாவுக்கு புதுச்சேரி மாநில கட்சி நிலவரம் குறித்து நான்தான் நம்பகமான தகவல்களை தந்தேன். 1989 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஜெ அணிக்கும் காங்கிரஸுக்கும் சம எண்ணிக்கையில் எம்.எல்.ஏ கள் இருந்தார்கள்.

அப்போது காட்டுமன்னார்கோயில் சுயேச்சை எம்.எல்.ஏ. தங்கராசுவை நான்தான் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றேன். அந்த அளவுக்கு ஜெயலலிதா என்னை நம்பி பணிகளை ஒப்படைத்திருக்கிறார்.

ஆனால் இப்போது, உள்ளூர் காரன், வெளியூர்க்காரன் என்று சொல்லி கடலூர் மாவட்ட அதிமுக-வினர் என்னைப் பிரித்துப் பார்க்கின்றனர். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலா ளரிடம் என் நிலை குறித்து முறையிட்டபோதும் இதோ, அதோ என இழுத்தடிக்கிறார்.

மாவட்ட அமைச்சரான சி.சம்பத்திடம் எனக்கு கட்சியில் ஏதாவது பொறுப்பு கொடுங்கள் என்று கேட்டும் பலனில்லை. கட்சிக்காரர்கள் என்னை உதாசீனப்படுத்தினாலும் முதல்வருக்கு எனது நிலைமை தெரிந்தால் நிச்சயம் வாய்ப் பளிப்பார் என்ற நம்பிக்கையில் சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத் திருக்கிறேன்.

என்னைப்போலவே சோதனையான காலகட்டங்களில் கட்சியைக் கட்டிக்காத்த உண்மை விசுவாசிகள் உதாசீனப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களை எல்லாம் அடையாளம் கண்டு முதல்வர் ஜெயலலிதா உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x