Published : 06 Jul 2019 08:19 PM
Last Updated : 06 Jul 2019 08:19 PM
வெளியூர் உறுப்பினர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்ட நிலையில் நடந்துள்ள நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்துக்கு கடந்த ஜூன் 23-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலை ரத்து செய்யக் கோரி சேலத்தைச் சேர்ந்த துணை நடிகர் பெஞ்சமின், திம்மராசு, சிங்காரவேலன் ஆகிய மூன்று உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அவர்களது மனுவில், “தேர்தலுக்கு முந்தைய நாள் வரை தபால் வாக்குகள் வராததால், சென்னைக்கு வந்து வாக்களிக்க முயன்ற போது அனுமதி மறுக்கப்பட்டது, சங்க விதிகளின்படி, சென்னைக்கு வெளியில் வசிக்கும் உறுப்பினர்கள், தபாலில் மட்டுமே வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, இந்த நிலையில் தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தங்களைப் போல பலருக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும், தங்களுக்கும் வாய்ப்பளித்து தேர்தலை நடத்த வேண்டும்” என அவர்கள் மனுவில் கோரியுள்ளனர்.
இந்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் ஜூலை 8 (திங்கட்கிழமை) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
அதேசமயம், நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி வைத்த உத்தரவை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கும் அன்றைய தினம் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த வழக்கில்தான் தேர்தலை ஜூன் 23 நடத்தலாம், ஆனால் வாக்குகளை எண்ணாமல் பத்திரப்படுத்த வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT