Last Updated : 09 Jul, 2019 05:32 PM

 

Published : 09 Jul 2019 05:32 PM
Last Updated : 09 Jul 2019 05:32 PM

மது போதையில் தகராறு செய்த தந்தை தள்ளிவிட்டதில் மகள் உயிரிழப்பு: நெல்லை அருகே பரிதாபம்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் மது போதையில் தகராறு செய்த தந்தை தாக்கியதில் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.

விக்கிரமசிங்கபுரம், ராமலிங்கபுரம் தெருவைச் சேர்ந்தவர் கைலாசம் (35). இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள்கள் ஐஸ்வர்யா (13), சுகிர்தா (8).

நேற்று இரவு இரண்டாவது மகள் சுகிர்தா, வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக உறவினர்களிடம் கைலாசம் கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த உறவினர்கள், விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில், சுகிர்தா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கைலாசம் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து, தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். நேற்று இரவும் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கைலாசம், தனது மனைவியைத் தாக்கியுள்ளார். இதை அவரது இரண்டாவது மகள் சுகிர்தா தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கைலாசம், தனது மகள் சுகிர்தாவை அடித்துத் தள்ளி விட்டுள்ளார்.

இதில், சுவரில் முகம் மோதியதில் சுகிர்தா மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே சுகிர்தா இறந்துவிட்டார். இதனால், உடலை வீட்டுக்கு கொண்டுசென்றுள்ளார். பின்னர், சுகிர்தா தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், கைலாசம், அவரது மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x