இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: பொதுமக்களிடம் சிக்கிய கல்லூரி மாணவர்கள்

இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி: பொதுமக்களிடம் சிக்கிய கல்லூரி மாணவர்கள்
Updated on
1 min read

சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 சவரன் தங்க தாலி சங்கிலியை பறிக்க முயன்ற தண்டையார்பேட்டை  பகுதியை சேர்ந்த  கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடிகொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரமணா நகர் பகுதியில் வசிப்பவர் தெய்வானை(30). நேற்று மாலை தனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப் போது இருசக்கர வாகனத்தில் வந்த  இரண்டு பேர் தெய்வானை அருகில் வந்து அவர் கவனிக்காத நேரத்தில் அவர் கழுத்திலிருந்த தாலிச் சங்கிலியை அறுக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தெய்வானை தாலியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். தெய்வானையிடம் தாலியைப் பறித்தே தீருவது என அந்த இளைஞர்களும் மல்லுக்கட்ட சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடிவர சங்கிலியை பறிப்பதை விட்டு இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்ப முயன்றுள்ளனர்.

ஆனால் பொதுமக்கள் சுற்றி வளைக்கவே மோட்டார் சைக்கிளோடு இருவரும் சிக்கிக் கொண்டனர். பின்னர் இருவரையும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து கைகளை பின்னால் கட்டி போலீஸாருக்கு போன் செய்தனர். இருவரும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டதால் அழுது புலம்பும் காட்சியை ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலாகி வருகிறது.

அந்த காணொலியில் செயின் பறிப்புக்கு ஆளான பெண் அவர்களை பிடித்து கோபத்துடன் அடித்து பணம் வேண்டுமென்றால் உழைத்து சாப்பிட வேண்டியது தானே இப்படி அடுத்தவர்கள் உழைப்பில் வாழ நினைக்கிறாயே, செயின் பறிக்கும்போது கீழே விழுந்து உயிர் போச்சுனா யார் பொறுப்பு என்று கேட்கிறார். தற்போது இந்த காணொலி வைரலாகி வருகிறது.

பிடிபட்ட இருவரையும் மீஞ்சூர் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் தண்டையார் பேட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள்  என தெரியவந்தது. இவர்கள் இருவரும் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் செலவிற்கு பணம் இல்லாததால் இதுபோன்ற வழிப்பறியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in