Published : 13 Jul 2019 11:26 AM
Last Updated : 13 Jul 2019 11:26 AM

தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறை: உயர் நீதிமன்றத்தில் வைகோ மேல் முறையீடு

தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டு 'நான் குற்றம்சாட்டுகிறேன்' என்ற தலைப்பில் பேசினார். இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தமிழக அரசு, அவர் மீது தேசத்துரோக வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் எம்.பி., எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி தேசத்துரோக வழக்கு 124 (ஏ) பிரிவின் கீழ் ஓராண்டு சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8 (3)- ன் கீழ் தண்டனை விதிக்கப்பட்டதால் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு ஏற்பட்ட தடை நீங்கியது. ஓராண்டு தண்டனை  தகுதி நீக்கத்தில் வராது என்பதால் மாநிலங்களவை உறுப்பினராக வைகோ சிக்கலின்றி தேர்வானார். தனக்கு தண்டனை விதிக்கப்பட்ட போது, தான் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை நிறுத்தி வைக்குமாறு வைகோ கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து ஒரு மாத காலத்திற்கு தண்டனையை நிறுத்தி வைப்பதாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

அவரது முறையீட்டு மனுவில், "சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனக்கு தெரிந்ததை வைத்து தீர்ப்பு வழங்கியுள்ளார். சட்டப்படி தீர்ப்பு வழங்கவில்லை" என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x