

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்திய தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது ஆளுநர் கையெழுத்திட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்த மனுவில், "கடந்த ஆண்டு ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்குப் பரிந்துரை அனுப்பியது.
ஆனால், இந்தத் தீர்மானத்தின் மீது இதுவரை ஆளுநர் கையெழுத்திடவில்லை. எனவே ஆளுநர் கையெழுத்திட உத்தரவிட வேண்டும்", என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.,
இந்த வழக்கு நீதிபதி சுப்பையா மற்றும் நீதிபதி சரவணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பாக ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆளுநர் கையெழுத்திட உத்தரவிட வேண்டும் என்று கோரிய மனு விசாரணைக்கு உகந்ததல்ல என வாதிட்டார்.
மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்காக வரும் வியாழன் அன்று ஒத்திவைக்கபட்டது