Published : 01 Jul 2019 12:00 AM
Last Updated : 01 Jul 2019 12:00 AM

பயணிகளின் தினசரி வருகை 1.15 லட்சமாக உயர்வு; ரூ.18 கோடியில் தாம்பரம் ரயில் முனையம் விரிவாக்கம்: கூடுதல் ரயில்களை இயக்க 2 புதிய நடைமேடைகள் அமைக்க முடிவு

தாம்பரம் ரயில் முனையத்தில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், ரூ.18 கோடியில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், கூடுதலாக விரைவு ரயில்களை இயக்க புதியதாக 2 நடைமேடைகள் அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்கள் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், போக்குவரத்து தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல், பிற மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதனால், ரயில் சேவையை விரிவுபடுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் முனையங்கள் தவிர, தாம்பரத்தில் 3-வது ரயில் முனையம் கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இதற்கிடையே, தாம்பரம் ரயில் நிலையத்தில் தினசரி வந்து செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

படிப்படியாக மேம்படுத்த...

எனவே, இந்த ரயில் முனையத்தில் ரயில்களின் இயக்கத்தை அதிகரிப்பதோடு, அடிப்படை வசதிகளையும் படிப்படியாக மேம்படுத்த ரயில்வே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தென்மாவட்ட விரைவு ரயில்களும், மின்சார ரயில்களும் தாம்பரம் ரயில் முனையத்தை கடந்தே சென்னை எழும்பூருக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளதால், இங்கு அடிக்கடி சிக்னல் கோளாறு ஏற்பட்டு தாமதம் ஏற்படுகிறது.

தாமதமின்றி இயக்க...

மேலும், எஸ்கலேட்டர் வசதியும்,நடைமேம்பாலங்களும் போதிய அளவில் இல்லாததால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, தாம்பரம் ரயில் முனையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதோடு, ரயில்களை தாமதம் இன்றி இயக்க கூடுதல் நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்று நிர்வாகத்துக்கு ரயில்வே அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தாம்பரத்தில் கூடுதல் நடைமேடைகள் அமைக்க ஆய்வுப் பணிகளை ரயில்வே தற்போது மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து 7 விரைவு ரயில்களும், ஒரு பயணிகள் ரயிலும் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. தென்மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் தாம்பரம் வழியாக இயக்குவதால் முக்கிய மையமாக தாம்பரம் முனையம் திகழ்கிறது. இதனால், பயணிக்கை எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

எனவே, சுமார் ரூ.18 கோடியில் அடுத்தடுத்து பல்வேறு விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள 8 நடைமேடைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்த 2 நடைமேடைகளும் தாம்பரம் கிழக்குப் பகுதியில் 25 பெட்டிகள் கொண்ட ரயிலை நிறுத்தும் அளவுக்கு அமைக்கப்படும். புதிய நடைமேடைகள் அமைப்பதன் மூலம்விரைவு ரயில்கள் சிக்னல்களுக்காகத் தாம்பரம் அருகே நிறுத்துவது தவிர்க்கப்படும். மேலும், 3-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களையும் கூடுதலாக இயக்க முடியும். இதுதவிர, கூடுதலாக கண்காணிப்புக் கேமராக்கள் அமைப்பது, எஸ்கலேட்டர்கள் வசதிகள் ஏற்படுத்துவது போன்ற பணிகளையும் மேற்கொள்ள உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x