

நீட் தேர்வு வேண்டாம் என்பதே காங்கிரஸின் கொள்கை ஆனால் முதல்வர் இப்பிரச்சினையை திசை திருப்ப முயல்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பெரும்பான்மை மக்களுக்குப் பயன்படாத நீட் தேர்வு வேண்டாம் என்பதே காங்கிரஸ், திமுகவின் கொள்கை.
இதன் உண்மைத்தன்மையை உணர்ந்து முதல்வர் தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். அதை விடுத்து ஒரு கேள்விக்கு பதில் சொல்லாமல் அதற்கு இன்னொரு கேள்வி எழுப்புவது சரியில்லை.
நீட் தேர்வை காங்கிரஸ் ஆட்சிதான் கொண்டு வந்தது என்று முதல்வர் குற்றஞ்சாட்டுகிறார்.நீட் தேர்வை பொருத்தவரை முதல்வர் சொல்வது தவறு. முதல்வர் பிரச்சினையை திசை திருப்புகிறார்.
ஒரு திட்டத்தைக் கொண்டுவரும்போது அது சரியில்லை என்றால் அந்த திட்டத்தை பின்னர் மாற்றிக் கொள்வதுதான் அரசாங்க நடைமுறையாக இருக்கிறது.
சரியில்லாத ஒரு திட்டத்தை தமிழக அரசு ஏற்பது சரியா? அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் நீட் தேர்வில் 4% மற்றுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் மருத்துவம் பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே, பெரும்பான்மை சமூகத்திற்குப் பயன்படாத இந்தத் திட்டம் தேவையில்லை.
மேலும், மாநிலங்கள் விரும்பாத பட்சத்தில் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
நீட் தேர்வை அனுமதிப்பது சமூக நீதிக்கு எதிரானது, தவறானது" என்றார்.