Published : 01 Jul 2019 12:36 PM
Last Updated : 01 Jul 2019 12:36 PM

எழுவர் விடுதலை; ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட்  பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை முன் கூட்டியே விடுதலை செய்யும் வகையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தங்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் 2012-ல் தொடர்ந்த வழக்கு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான வழக்குகள் ஜூலை 30-ம் தேதி பட்டியல் இடப்பட்டுள்ளதால் இந்த வழக்கையும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கும்படி தமிழக அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் அரசு முடிவெடுத்த பின்பு ஏன் தாமதம்? என்று  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு 30-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x