Published : 12 Jul 2019 01:44 PM
Last Updated : 12 Jul 2019 01:44 PM

நீட்: அதிமுகவின் வரலாற்றுப் பிழையை மறைக்க திமுக மீது பழி போடுகின்றனர்; ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, திமுக மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுகதான். எதிர்ப்பு எழுந்ததால் பழியை எங்கள் மீது போடுகிறார்கள் என்று முதல்வர் பழனிசாமி, பச்சைப் பொய் ஒன்றை கொஞ்சமும் கூசாமல் திரும்பத் திரும்பச் சொல்லி வருவதற்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தது முதல்வராக இருந்த தலைவர் கருணாநிதிதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு கடிதம் எழுதி எதிர்ப்பு தெரிவித்ததோடு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து நீட் தேர்வுக்கு தடையும் பெற்றார்.

ஆகவே திமுக ஆட்சி இருந்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழையவில்லை. அதுமட்டுமல்ல, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்த போதே நீட் தேர்வை ரத்து செய்து உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது.

ஆனால் தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் இருந்த போதுதான் நீட் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட- அந்த வழக்கில் முழு விசாரணை நடைபெறும் முன்பே, நீட் தீர்ப்பு திரும்பப் பெறப்பட்டு- இன்றைக்கு நீட் தேர்வு தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

இப்போது நீட் தேர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் மத்திய பாஜக அரசுக்கு அடி பணிந்து- அதிமுக ஆட்சி இன்றுவரை தள்ளாடிக் கொண்டிருக்கிறது. நீட் மசோதாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2017-ல் மசோதா நிறைவேற்றப்பட்டும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் நீட் தேர்வை பாஜகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் அமல்படுத்தியது அதிமுக ஆட்சிதான்.

அது மட்டுமல்ல- நீட் மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட பிறகும்- 21 மாதங்கள் அதை மறைத்து- அரசியல் சட்டப் பிரிவில் அதன் வார்த்தையின் அர்த்தம் கூடத் தெரியாமல் சட்டப்பேரவைக்குத் தவறான தகவலைத் தந்து கொண்டிருப்பதும் அதிமுக அமைச்சர்களும், முதல்வரும்தான்! ஏன் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையிலேயே நீட் தேர்வு குறித்து பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியதும் அதிமுகதான்.

ஆறு மாதங்களுக்குள் மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பும் அதிகாரத்தையும் தாரை வார்த்து விட்டு- பாஜகவின் நீட் தேர்வு மோகத்திற்கு கைகொடுத்து தறிகெட்ட ஆட்சி நடத்திக் கொண்டிருப்பது முதல்வர் பழனிசாமிதான். ஆகவே நீட் தேர்வில் அதிமுக ஆட்சியின் பச்சைத் துரோகத்தை முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பதற்காக, திமுக மீது 'கோயபல்ஸ்' பிரச்சாரத்தில் ஈடுபடும் முதல்வரும், அவரது சுகாதார மற்றும் சட்ட அமைச்சர்களும் தமிழகத்தின் சாபக்கேடுகள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நுழைவுத் தேர்வு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தது ஜெயலலிதாதான் என்கிறார். ஆனால் பிரியதர்ஷினி என்ற மாணவி போட்ட வழக்கில், அந்தக் கொள்கை முடிவு எடுத்த 9.6.2005 தேதியிட்ட அரசு ஆணை, ஜெயலலிதா ஆட்சியிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை மறைத்து விட்டார்.

ஆனால் தலைவர் கருணாநிதி கழகத் தேர்தல் அறிக்கையிலும், 2006-ல் முதல்வரானவுடன் தனது அரசின் ஆளுநர் உரையிலும், பிறகு தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதி நிலை அறிக்கையிலும் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்தார்.

அந்த கமிட்டி அளித்த அறிக்கையை ஏற்று, 6.12.2006 அன்று ஒரு மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றி- நுழைவுத் தேர்வை சட்டம் மூலம் ரத்து செய்தார். இந்த மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி 3.3.2007 அன்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது திமுக ஆட்சிதான்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட அஸ்வின் குமார் வழக்கில் அந்தச் சட்டம் செல்லும் என்று தீர்ப்பு வெளிவந்ததும் திமுக ஆட்சியில்தான். பிறகு அதன் மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றமே நிராகரித்து- தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்ததும் கழக ஆட்சி இருந்த போதுதான்.

இந்த அடிப்படைத் தகவல்கள் கூட சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவருக்குத் தெரியவில்லை; அல்லது தெரிந்திருந்தும் அரசியல் காரணங்களுக்காக மக்களைத் திசை திருப்புகிறார். ஆகவே நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததும் திமுக ஆட்சிதான். நுழைவுத் தேர்வை சட்ட பூர்வமாக ரத்து செய்து, இன்றைக்கு பிளஸ்-டூ மதிப்பெண்கள் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறக் காரணமாக இருந்ததும் திமுக ஆட்சிதான் என்பதை முதல்வருக்கும், வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி அரசியல் வாழ்க்கை நடத்தும் அமைச்சர்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இனிமேலாவது வடிகட்டிய பொய்யை தயக்கமில்லாமல் வழங்கி, தங்கள் மீதுள்ள கரையை - அதிமுக அரசு நீட் தேர்வு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற முடியாமல் கோட்டை விட்ட வரலாற்றுப் பிழையை மறைக்க, திமுக மீது மீண்டும் மீண்டும் பழி போடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்", என, மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x