Published : 12 Jul 2019 09:55 AM
Last Updated : 12 Jul 2019 09:55 AM

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து மக்களிடம் புரிதலை ஏற்படுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும்: சூழலியல் செயல்பாட்டாளர்கள் குழப்புவதாக ஹெச்.ராஜா குற்றச்சாட்டு

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த புரிதலை மக்களிடத்தில் ஏற்படுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

திருவாரூரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரஸ் அரசில் நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், வாய்மொழியாக வங்கிகளுக்கு அறிவுறுத்தி நீரவ் மோடி உள்ளிட்ட தொழிலதிபர்களுக்கு கடன்கொடுக்க வைத்தார்.

கடனை வாங்கிக்கொண்டு வெளி நாட்டுக்கு தொழிலதிபர்கள் தப்பிச் செல்ல ப.சிதம்பரம்தான் காரணம்.

பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாட்டில் 33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இந்தச் சாதனைகளைப் படைத்த பிரதமர் மோடி தலைமையிலான அரசைத்தான் சிதம்பரம் விமர்சிக்கிறார். இவர் போன்றவர்களுக்கெல்லாம் நீதிமன்றம் எதிர்காலத்தில் பதில் சொல்லும். தமிழகத்தில் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருவது உறுதி.

மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டும் விவகாரத்தில், காவிரி ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து குழப்பமான மனநிலையில் விவசாயிகளும் பொதுமக்களும் உள்ளனர். சூழலியல் செயல்பாட்டாளர்கள் என்ற போர்வையில் மக்களை சிலர் குழப்புகின்றனர்.

எனவே, ஓஎன்ஜிசி அதிகாரிகள், நிபுணர்கள் மூலமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கருத்துக்கேட்புக் கூட்டத்தை நடத்தி மக்களுக்கு புரிதலை ஏற்படுத்த பாஜக நடவடிக்கை எடுக்கும். நதிநீர் பிரச்சினைகளுக்கு ஒற்றைத் தீர்ப்பாயம் நல்ல தீர்வாக அமையும். இதனால் காவிரி ஆணையத்துக்கு எந்த பாதிப்பும் வராது. மாறாக அதன் பலம் பெருகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x