Published : 02 Jul 2019 11:14 AM
Last Updated : 02 Jul 2019 11:14 AM

அமமுகவில் இருந்து வெளியேறுகிறார் இசக்கி சுப்பையா

அமமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான இசக்கி சுப்பையா, அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைகிறார்.

இதுதொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய அவர், எனது அரசியல் முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று தென்காசியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த முடிவை அறிவித்தார். ஜூலை -6ம் தேதி அதிமுகவில் இணையவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அமமுகவின் முக்கிய நபர்களில் இசக்கி சுப்பையாவும் ஒருவர். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். அமமுகவும் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது.

சட்டப்பேரவை இடைத் தேர்தலிலும் அமமுகவுக்கு ஓரிடம் கூடக் கிடைக்காத நிலையில், அமமுக நிர்வாகிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மைக்கேல் ராயப்பன், செந்தில் பாலாஜி ஆகியோர் அமமுகவில் இருந்து விலகிய நிலையில், தங்க தமிழ்ச்செல்வன் அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார்.

இதைத் தொடர்ந்து இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து விலகியுள்ளார். சென்னை, அசோக் நகரில் இசக்கி சுப்பையாவுக்குச் சொந்தமான இடத்தில் அமமுகவின் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. அவர் வெளியேறியுள்ள நிலையில், அதே இடத்தில் அமமுக அலுவலகம் இயங்குமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக 2011-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து தேர்வான இசக்கி சுப்பையா, 45 நாட்கள் மட்டுமே சட்ட அமைச்சராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x