Last Updated : 12 Jul, 2019 05:30 PM

 

Published : 12 Jul 2019 05:30 PM
Last Updated : 12 Jul 2019 05:30 PM

ஜீப் ஓட்டுநர்கள் 2-ம் நாளாக போராட்டம்: தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ஓட்டல், ரிசார்ட் தொழில்கள் பாதிப்பு

தேக்கடியில் உள்ள கேரள வனத்துறை சோதனைச் சாவடியை வாடகை ஜீப் ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இவர்களின் இரண்டாம் நாள் போராட்டத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து ஓட்டல், ரிசார்ட் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் தேக்கடியில் பெரியாறு அணை அமைந்துள்ளது. இங்குள்ள நீர்தேக்கத்தில் சுற்றுலா பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. ஒன்றரை மணி நேரம் செல்லக்கூடிய இந்தப் படகு பயணத்திற்கு பெரியவர்களுக்கு ரூ.255-ம், குழந்தைகளுக்கு ரூ.85-ம் வசூலிக்கப்படுகிறது.

இதுதவிர வீடியோ கேமராவிற்கு ரூ.300-ம், போட்டோ கேமராவிற்கு ரூ.35-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த படகுகள் காலை 7.30, 9.30, 11.15, பிற்பகல் 1.45ஆகிய நேரங்களில் இயக்கப்படுகிறது.

இங்கு கேரளா, தமிழ்நாடு மட்டுமல்லாது வடமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகளும் அதிகளவில் வருவர்.

ஆரம்பத்தில் தேக்கடிவரை வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. 2017-ல் உச்சநீதிமன்ற உத்தரவினைத் தொடர்ந்து ஆனவச்சால் எனும் இடத்தில்  வாகன நிறுத்தம் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் கார் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பலரும் இங்கு நிறுத்திவிட்டு வனத்துறையினர் இயக்கும் வண்டிகளில்தான் தேக்கடி செல்ல முடியும்.

இதற்காக வாகன வாடகையாக காருக்கு ரூ.85 வசூலிக்கப்படுகிறது. அதே போல் வனத்துறையினர் வாகனத்தில் தேக்கடி படகு குழாமிற்குச் செல்ல ரூ.65 பெறப்படுகிறது.

இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு கூடுதல் செலவினம் மற்றும் நேர விரயம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று வனத்துறையினர் இந்த இடத்தில் வாடகை ஜீப்களை நிறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர். இதற்கு ஓட்டுநர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் ஜீப்களையும் இயக்க மறுத்தனர்.

இந்நிலையில் இரண்டாம் நாளாக இன்றும் இவர்களின் போராட்டம் தொடர்ந்தது. இதற்காக குமுளியில் உள்ள கேரள வனத்துறை சோதனைச் சாவடியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.

இதனால் எந்த சுற்றுலாப்பயணிகளும் தேக்கடிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே படகு இயக்கமும் நேற்று நிறுத்தப்பட்டது.

இது குறித்து ஜீப் ஓட்டுநர்கள் கூறுகையில், "சுமார் 300 ஜீப்களை சுற்றுலா பயணிகளுக்காக இயக்கி வருகிறோம். தேக்கடி மட்டுமல்லாது, மூணாறு உள்ளிட்ட பல பகுதிகளுக்கும்  செல்கிறோம். இந்நிலையில் வனத்துறையினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். ஆனவச்சால் எனும் இடத்தில் வாடகை ஜீப்களை நிறுத்தவிடுவதில்லை. இதனால் எங்கள் தொழில் பாதிக்கிறது. ஏற்கனவே வங்கியில் லோன் பெற்றே இந்த வாகனங்களை வாங்கி இயக்கி வருகிறோம். எனவே முன்பு போல ஜீப்களை நிறுத்த வனத்துறையினர் அனுமதிக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும்" என்றனர்.

இவர்களின் இரண்டாவது நாள் போராட்டத்தினால் இன்று சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஓட்டல், ரிசார்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன.

எனவே வனத்துறையினர் தேவையற்ற கட்டுப்பாடுகள் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x