

தமிழகத்தில் அனைத்து பேருந்து நிலையங்கள், போக்குவரத்து கழக டெப்போக்கள், நிர்வாக அலுவலங்களில் சிசிடிவி கேமரா பொருத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்து கழகத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து முதுநிலை கண்காணிப்பாளராக இருந்து 31.5.2016-ல் ஓய்வு பெற்றவர் பி.ராஜேந்திரன்.
இவர் அரசு போக்குவரத்துக் கழக மேம்பாடு மற்றும் நிதி கழகத்தின் இணை மேலாண்மை இயக்குனராக பணிபுரியும் எம்.சுகுமார், போக்குவரத்து கழக நிதியை தவறாக பயன்படுத்தி வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை முதன்மை செயலருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் இன்று பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரின் புகார் மனு தொடர்பாக போக்குவரத்து துறை முதன்மை செயலர் 6 வாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கும் உயர் அதிகாரிகள், மனைவி மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் சொத்துக்கள், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்களாக என்பது தொடர்பாக 4 மாதத்தில் விசாரணை நடத்த வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகங்களில் பணிகளையும், அங்கு நடைபெறும் தவறுகளை கண்காணிக்கவும், பணி மேம்பாட்டுக்காகவும் அனைத்து பஸ் நிலையங்கள், போக்குவரத்து கழக டெப்பேக்கள், நிர்வாக அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.