Published : 06 Jul 2019 01:17 PM
Last Updated : 06 Jul 2019 01:17 PM

வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிப்பு

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் திமுக சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கதிர் ஆனந்த் போட்டியிடுவார் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சூழ்நிலையில், திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வீட்டில் மார்ச் 29, 30 தேதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்களும், ரூ.10 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.

அதற்கு இரண்டு நாள் கழித்து ஏப்ரல் 1 மற்றும் 2-ம் தேதி துரைமுருகனின் நெருங்கிய உறவினரும் திமுக பகுதி செயலாளருமான பூஞ்சோலை சீனிவாசனின் சகோதரி வீடு, சிமெண்ட் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.11 கோடியே 48 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வேலூர் தொகுதிக்கு ஆகஸ்ட் 5 அன்று தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலில் முன்பு அறிவித்தபடி, புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுவார் என, அதிமுக அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவும் முன்பு அறிவித்த கதிர் ஆனந்தை வேட்பாளராக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் ஆகஸ்ட், 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில், தோழமைக் கட்சிகளின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக கதிர் ஆனந்த் போட்டியிடுவார்", என அறிவிக்கப்பட்டுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x