Last Updated : 02 Jul, 2019 03:23 PM

 

Published : 02 Jul 2019 03:23 PM
Last Updated : 02 Jul 2019 03:23 PM

மலைப்பகுதியில் விடுதி வசதி இல்லை: கல்விக்காக குழந்தைகளைப் பிரிந்து வாழும் மேகமலை எஸ்டேட் தொழிலாளர்கள்

மேகமலையில் பள்ளி சென்று திரும்ப உரிய போக்குவரத்து வசதி இல்லாதது, வரும் வழியில் குழந்தைகளுக்கு விலங்குகளால் பாதிப்பு ஏற்படலாம் போன்ற பிரச்சினைகளால் எஸ்டேட் தொழிலாளர்கள் பலரும் தங்கள் பிள்ளைகளை வெளியூர்களில் படிக்க வைக்கும் நிலையில் உள்ளனர்.

தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் இரவங்கலாறு, மகாராஜமெட்டு, வெண்ணியாறு, மணலாறு உள்ளிட்ட பல பகுதிகள் அமைந்துள்ளன.  இங்கு சுமார் 10000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. 1930-ல் பிரிட்டிஷ் காலத்தில் உருவான இப்பகுதிகள் பின்பு ஒப்பந்த மற்றும் தனியார் முறைக்கு மாறி விட்டன.

இதற்காக பல தலைமுறைகளாகவே இங்கு தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  கொழுந்து பறித்தல், களையெடுத்தல், உரம் வைத்தல் என்று பல்வேறு பணிகளையும் இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்காக எஸ்டேட் பகுதிகளிலே குடியிருப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகளின் கல்விக்காக மேகமலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. காலை 7 மணிக்கு சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு ஒரு பேருந்து கிளம்புகிறது. ஆனால் இது மேல்மணலாறு செல்வதில்லை.

எனவே அப்பகுதி குழந்தைகள் தேயிலை தோட்டங்கள் வழியே மணலாறு வர வேண்டும். அதற்குள் பேருந்து சென்றுவிட்டால் அணை வழியே பள்ளி செல்ல வேண்டும். அணையில் நீர் தேங்கினால் இந்த வழியிலும் செல்ல முடியாது.

பள்ளி முடிந்து வீடு திரும்புவதிலும் இதே சிக்கல் உள்ளது. மாலையானதும் நடந்து வருகையில் விலங்குகள் குறுக்கீடு இருக்கும் என்பதால் பெற்றோர் பள்ளிக்கு அனுப்பப் பயப்படுகின்றனர். இதே நிலை பல கிராமங்களிலும் உள்ளது.

எனவே இப்பள்ளியில் விடுதி ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இருப்பினும் இதுவரை விடுதி வசதி ஏற்படுத்தாததால் பலரும் ராயப்பன்பட்டி, சின்னமனூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் விடுதியில் தங்கி கல்வி பயில அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் இவர்களுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. கூலி வேலை பார்த்தாலும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதி கல்விக்காக வெளியூரில் தங்க வைக்கின்றனர்.

இது குறித்து ஹைவேவிஸ் பகுதி மலைவாழ் மக்கள்நலச் சங்க செயலாளர் மாரியப்பன் கூறுகையில், மேகமலையைச் சுற்றியுள்ள தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 250 பேர் இருப்பர். இவர்களின் குடும்பப் பொருளாதாரத்திற்கு உள்ளூரில் படிக்க வைக்கத்தான் விரும்புகின்றனர்.  விடுதி இல்லாததால் இவர்களின் ஆசை நிறைவேறவில்லை.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிட நலத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ஆவண செய்து தருவதாகக் கூறி இருக்கிறார்கள். விடுதி அமைந்தால் கூலி்த் தொழிலாளர்களுக்கு கல்வியால் ஏற்படும் கூடுதல் செலவினம் குறையும். அவ்வப்போது குழந்தைகளை சந்தித்துக் கொள்ளவும் வசதியாகவும் இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x