Published : 06 Jul 2019 11:00 AM
Last Updated : 06 Jul 2019 11:00 AM
தென்காசியில் இன்று நடைபெறும் விழாவில் அமமுகவிலிருந்து ஏராளமானோர் விலகி அதிமுகவில் இணைகிறார்கள். விழாவில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். பிரம்மாண்ட பந்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா தென்காசியில் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி உள்ளிட்ட அமைச்சர்கள், செல்வமோகன்தாஸ் பாண்டியன், மனோகரன் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
இதற்காக முதல்வரும், துணை முதல்வரும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் நாளை பிற்பகலில் வருகிறார்கள். அங்கிருந்து கார் மூலம் திருநெல்வேலி வழியாக தென்காசி செல்கிறார்கள். வழியில் பாளையங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய இடங்களில் அவர்களுக்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தென்காசியில் இசக்கி மஹாலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் இணைப்பு விழாவில் முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் ஆயிரக்கணக்கானோர் அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைகிறார்கள். விழாவுக்காக பிரம்மாண்ட பந்தல் மற்றும் அலங்கார நுழைவு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வர், துணை முதல்வர் வரும் வழிநெடுக அதிமுக கொடி தோரணங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விழா முடிந்ததும் வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக முதல்வரும், துணை முதல்வரும் மதுரை செல்கிறார்கள்.
முதல்வர் வருகையையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி யிலிருந்து திருநெல்வேலி வழியாக தென்காசிக்கு அவர்கள் செல்லும் வழிநெடுக போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். விழா நடைபெறும் இடத்திலும் நூற்றுக்கணக்கான போலீஸார் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT