Published : 02 Jul 2019 08:19 PM
Last Updated : 02 Jul 2019 08:19 PM

ஓபிஎஸ் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 11 பேருக்கு எதிரான வழக்கு: நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி  நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலா சிறை செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக  சட்டப் பேரவையில்   எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கெதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்எல்ஏவுமான சக்கரபாணி மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சக்ரபாணி, தங்கத்தமிழ்ச் செல்வன் தனித்தனியாக மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி தலைமையிலான அமர்வில் பல மாதங்களாக விசாரிக்கப்பட்டு வந்தது.

பின்னர் நீதிபதி சிக்ரி ஓய்வுப்பெற்றதை அடுத்து வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் வழக்கு விசாரணை குறித்து பல நேரம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனாலும் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமலே இருந்தது.

இந்நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மனுவை பரிசீலனைக்கு ஏற்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, பி.ஆர். காவாய் அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இதே அமர்வுமுன் சட்டப்பேரவைத்தலைவருக்கு எதிராக டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x