Published : 01 Jul 2019 06:11 PM
Last Updated : 01 Jul 2019 06:11 PM

மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞர்; ரோட்டில் இழுத்துச் சென்ற போக்குவரத்து போலீஸ்

திருப்பூர் எஸ்ஏபி சந்திப்பு அருகே குடிபோதையில் இருந்த இளைஞருக்கும் போக்குவரத்து போலீஸுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

திருப்பூர் அவிநாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பு அருகே போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி தலைமையில் போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவருடைய மோட்டார் சைக்கிளைப் பறிமுதல் செய்தனர். அப்போது முரளி குடிபோதையில் போலீஸாரிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீஸ் பொன்னாங்கண் என்பவருக்கும் முரளிக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதில் முரளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், போலீஸ் பொன்னாங்கண்ணின், சட்டையும் கிழிந்தது. இதனிடையே காவலர் பொன்னாங்கண், குடிபோதையில் இருந்தவரை ரோட்டில் இழுந்து வந்த காட்சிகள், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியானது.

இதில் காயமடைந்த போலீஸ் பொன்னாங்கண் மற்றும் முரளி 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x