

நீர்நிலைகளைத் தூர் வாருவதற்காக மணமேடையிலேயே புதுமணத் தம்பதிகள் நிதி உதவி வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
போதிய மழையின்மையால் மாநிலம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டுவிட்டன. காணப்படுகின்றன. அனைத்து நீர்நிலைகளையும் தூர் வாரி, அவற்றில் அதிக அளவு தண்ணீர் சேமிக்கப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள், மட்டுமின்றி, பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி, தூர் வாரும் பணியில் அரசு மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், புதுக்கோட்டை, கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு அதே ஊரைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் உதவிகளைச் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன் - கார்த்திகா என்பவர்களுக்குத் திருமணம் நடைபெற்றது. நீர் நிலைகளைத் தூர்வாருவதில் தங்களுடைய பங்கும் இருக்கவேண்டும் என்று அத்தம்பதியினர் ஆசைப்பட்டனர். இதனால் திருமணம் முடிந்த கையோடு, மணமேடையிலேயே வைத்து 6 ஆயிரம் ரூபாயை இளைஞர்களிடம் வழங்கினர்.
ஏற்கெனவே அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜம்மாள் என்ற மூதாட்டி, நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிக்காக ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கியிருந்தார். இந்நிலையில் புதுமணத் தம்பதியரின் செயல், மண்டபத்தில் இருந்தவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.