Published : 03 Jul 2019 12:36 PM
Last Updated : 03 Jul 2019 12:36 PM
உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்படும் மாநில மொழிகளில் தமிழ் மொழி இல்லாதது ஏமாற்றமளிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் விவரங்கள், ஆங்கில மொழியில் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி, ஆங்கிலத்துடன் இந்தி, அஸ்ஸாமி, கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான மென்பொருளை உச்ச நீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.
தென்னிந்திய மொழிகளில் கன்னடமும் தெலுங்கும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநில உயர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றத்திற்கு அதிக அளவிலான மேல்முறையீட்டு வழக்குகள் வருகிறதோ அந்த மாநில மொழிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த 5 மொழிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்பட்டியலில் தமிழ் மொழி இடம்பெறாதது ஏமாற்றமளிப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் வெளியிடுவது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் 5 மாநில மொழிகளில் வெளியிடப்படும் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்படாது என்பது ஏமாற்றமளிக்கிறது.
உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்ச நீதிமன்றம் கேட்டுப் பெறலாம்", என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT