Published : 06 Jul 2019 10:50 AM
Last Updated : 06 Jul 2019 10:50 AM
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிர்ணயம் செய்யவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "மத்திய பாஜக அரசின் மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு சிறப்பு கூடுதல் கலால் வரி விதித்திருப்பதால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என்பதை கவனத்தில் கொண்டு வரியை தவிர்க்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதாவது ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் புதியதாக, சிறப்பு கலால் வரியாக 1 ரூபாயை அறிவித்திருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும். இந்த விலை உயர்வால் போக்குவரத்துக்கான செலவும் கூடும், பொருட்களின் விலையும் உயரும்.
அதுமட்டுமல்ல அன்றாட போக்குவரத்துக்கு வாகனங்களைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வானது பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் அது அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும், சரக்கு கட்டணம் உயர்ந்து விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும். இதனால் பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.
எனவே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி விதிப்பை நீக்குவதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
மேலும் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
குறிப்பாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சிறப்பு கூடுதல் கலால் வரி விதிப்பை நீக்கவும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நிர்ணயம் செய்யவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்" என, ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT