Published : 04 Jul 2019 02:44 PM
Last Updated : 04 Jul 2019 02:44 PM

தமிழ் மொழியினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் பட்டியலில் சேர்க்க வேண்டியது தார்மீகக் கடமை: சீமான்

உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில் தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சீமான் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.

அதேநேரத்தில், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னக மாநில மொழிகள் அடங்கியிருக்கிற இந்தப் பட்டியலில் தமிழ் மொழிக்கு இடம் இல்லை என்கின்ற நிலை எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

சட்டம், தீர்ப்பு தொடர்பான கலைச்சொற்கள் ஏற்கெனவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்தியச் சட்டங்கள் தமிழ்மொழியில் பல்வேறு நூல்களாக ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டு விட்டன. நீதிமன்ற, நிர்வாக மொழியாக இருக்கும் தகுதியை தமிழ் மொழி ஏற்கெனவே அடைந்து விட்ட சூழலில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழ் மொழியில் வெளியிட எவ்விதமான தடையும் இல்லை.

இந்நிலையில் கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னக மொழிகளுக்கு அளிக்கப்பட்டிருக்கின்ற உரிய அங்கீகாரம் தமிழ் மொழிக்கு வழங்கப்படாதது இந்திய நீதித்துறையின் பாரபட்சமான நடவடிக்கை. கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழியான தமிழ் மொழி தனது இலக்கண இலக்கியச் செழுமைகளால் இந்தியாவில் நீண்ட காலம் நிலைத்து தழைத்து ஓங்குகிற மூத்த மொழியாகத் திகழ்ந்து வருகிறது.

'தமிழ் தான் இந்திய நிலத்தின் மூத்த மொழி' என்பதைப் பல்வேறு புகழ்பெற்ற அறிஞர்களும், பல சான்றோர் பெருமக்களின் ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன. தமிழ் மொழி பேசி வந்த நாகர்களே இந்தியப் பெருநிலத்தில் மூத்த குடிமக்கள் என அம்பேத்கர் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூட இந்தியாவின் பாரம்பரியமிக்கப் பண்பாட்டின் மூத்த மொழி தமிழ்மொழி எனப் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

உலகின் மிக மிகத் தொன்மையான மொழியான தமிழ் மொழி ஓர் உயர்தனிச் சொம்மொழியாகும். எல்லா இலக்கண இலக்கிய வளங்களையும் தன்னகத்தே கொண்டு, எம்மொழியின் துணையுமின்றித் தனித்து இயங்கவல்ல பேராற்றல் கொண்ட தன்னிகரில்லா மொழியான தமிழை, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடும் மொழிகளின் பட்டியலில் சேர்க்காதிருப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.

தமிழகம் ஏற்காத இந்தியை வலுக்கட்டாயமாகத் திணிக்கிற முன்முயற்சிகள் வீரியமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கும் மொழிகளின் பட்டியலில் சேர்க்காதிருப்பது தமிழருக்கும் தமிழ்நாட்டுக்கும் எதிராக வட மாநிலங்களைச் சேர்ந்தோர் கொண்டிருக்கின்ற உளவியலைத் தெளிவாகக் காட்டுகிறது.

தமிழை உயிரெனக் கொண்டு வாழும் தமிழ் மக்களுக்கு இத்தகைய அறிவிப்பானது பெருத்த ஏமாற்றத்தையும், மனவேதனையையும் தருகிறது. இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டங்களில் அதிகப் பங்களிப்பினைச் செய்து இந்நாட்டுக்கு வரி செலுத்தி வாக்கு செலுத்தி இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் தமிழ் சமூகத்தின் மீது தொடர்ச்சியாக வன்மம் காட்டி வரும் இந்திய வல்லாதிக்கத்தின் இன்னுமொரு அறிவிப்பாகத் தான் இந்த அறிவிப்பினைக் காண முடிகிறது.

இந்தியாவின் அரசிலமைப்புச்சாசனத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள 22 மொழிகளுள் சிறப்பிடம் வகிக்கும் தமிழ் மொழியினை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்படும் பட்டியலில் சேர்க்க வேண்டியது இந்நாட்டின் தார்மீகக் கடமையாகும்.

ஆகவே, தமிழ் மொழிக்கும், தமிழர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்படும் பட்டியலில் தமிழையும் இணைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத் தலைமை நீதியதியைக் கேட்டுக்கொள்கிறேன்", என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x