Published : 06 Jul 2019 08:04 AM
Last Updated : 06 Jul 2019 08:04 AM
மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டதால், நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.512 உயர்ந்தது. சென்னையில் நேற்று ஒரு பவுனுக்கு ரூ.26,552-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கம்விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. தங்கம் விலை குறைவை காட்டிலும், உயர்வு அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. அதாவது, ஒரு பவுன் 26,552-க்கு விற்பனை செய்யப்பட்டது.
காரணம் என்ன?
சர்வதேச அளவில் தங்கம் விலை உயரும்போதெல்லாம் உள்ளூரில் விலை உயர்ந்து வந்தது. ஆனால், தற்போதுள்ள தங்கம் விலை உயர்வுக்கு இந்தியாவில் மத்திய பட்ஜெட்டில் நேற்று வெளியிட்டுள்ள தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வு தான் காரணமாக இருக்கிறது. இதனால், சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.512 உயர்ந்து ஒரு பவுன் ரூ.26,552-க்கு
விற்பனையானது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3ஆயிரத்து 319-க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 255-க்கு விற்கப் பட்டது.
ரூ.30 ஆயிரத்தை நெருங்கும்
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுசெயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியதாவது, ‘‘தங்கம் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மீதான இறக்குமதி வரியை குறைக்க கோரி நாங்கள் வலியுறுத்தி வந்தோம். தற்போது வரி உயர்த்திருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களின் கணிப்பின்படி, தங்கம் விலை இந்த ஆண்டு இறுதியில் ஒருபவுன் விலை ரூ.30 ஆயிரத்தைநெருங்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT