சென்னையில் பராமரிப்பு பணிக்காக புறநகர் ரயில் சேவை குறைப்பு: பயணிகள் கடும் அவதி
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயில் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சென்னை கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்று காலை முதல் ரயில் சேவை குறைக்கப்பட்டது. அரைமணி நேரத்துக்கும் மேலாக இடைவெளி விட்டு ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் சில ரயில்கள் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பயணிகள் பின்னர் காத்திருந்து வேறு ரயில் வந்த பின்பு தாம்பரம் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடுமையாக அலைக்கழிக்கப்பட்டனர்.
புறநகர் ரயில் போக்குவரத்து மாற்றப்பட்டதால் உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் அவதிப்பட்டனர். தகவல் தெரியாத நிலையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால் பயணிகள் பெரிதும் இன்னலுற்றனர்.
