Published : 29 Jun 2019 11:48 AM
Last Updated : 29 Jun 2019 11:48 AM
திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதைக் காலம் உணர்த்தும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அமமுகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், சமீபகாலமாக அதிமுகவில் இணைய உள்ளதாகப் பேசப்பட்டது. ஆனால், அதிமுகவில் இணைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தடையாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தங்க தமிழ்ச்செல்வன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் இணைந்ததை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் இன்று (சனிக்கிழமை) தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "தங்க தமிழ்ச்செல்வன் திமுகவில் சேர்ந்தார். நேற்றைய ஹீரோ-இன்று ஜீரோ-நாளை யாரோ? அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்? ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு, அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை. இதில் எங்கே பாஜக இயக்குகிறது?
அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்! ஆட்சி மாற்றம் வரும்! வரும்! என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா? பிழைக்க வந்த பித்தளையா? என்பதைக் காலம் உணர்த்தும்", என தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT