Published : 12 Apr 2014 10:09 AM
Last Updated : 12 Apr 2014 10:09 AM

சென்ட்ரல் டவர்ஸ், ஓட்டல் அவுரா இடத்தை கையகப்படுத்தியது மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள சென்ட்ரல் டவர்ஸ், ஓட்டல் அவுரா ஆகியவை இருந்த இடத்தை மெட்ரோ ரயில் நிறுவனம் வெள்ளிக்கிழமை கையகப்படுத்தியது. உச்ச நீதிமன்ற தீர்ப் பையடுத்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் இந்த நட வடிக்கையை மேற்கொண்டனர்.

சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் எதிரே உள்ள அரசுக்குச் சொந்தமான இடத்தில் சென்ட்ரல் டவர்ஸ் ஓட்டலும், அவுரா ஓட்டலும் குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்தன.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்காக இந்த இடம் தேவை என்று தமிழக அரசுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கோரிக்கை விடுத்தது. அரசும், அந்த நிலத்தை எடுத்துக் கொள்ள அனுமதி அளித்தது. அரசு உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பளிக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஓட்டல் நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கிலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சாதகமாக கடந்த 9-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து ஓட்டலை காலி செய்யும்படி மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டது. அதன் பிறகும் அவர்கள் காலி செய்யவில்லை. எனவே ஓட்டலை கையகப்படுத்தும் நடவடிக் கையை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மேற்கொண்டனர்.

ஓட்டலில் இருந்த பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அருகில் இருந்த பிக்னிக் ஓட்டல் இருந்த இடம் மெட்ரோ ரயில் பணிக்காக கையகப்படுத்தப்பட்டது. இப்போது சென்ட்ரல் டவர்ஸ், ஓட்டல் அவுரா ஆகியவை உள்ள இடத்தை கையகப்படுத்தி வருகிறோம். அங்குள்ள மற்றொரு ஓட்டல் இடத்தையும் கையகப்படுத்த வேண்டியுள்ளது. அந்தப் பணியையும் முடித்துவிட்டால் மெட்ரோ ரயில் பணிகளை, குறிப்பாக சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணி முடியும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x