Published : 26 Aug 2017 08:43 AM
Last Updated : 26 Aug 2017 08:43 AM
அரசு கொறடாவின் பரிந்துரையை ஏற்று 19 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ள பேரவைத் தலைவர் தனபால், இதில் உள்ள சட்டச்சிக்கல்களை தீர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
அதிமுகவில் இரு அணிகளும் இணைந்தநிலையி்ல், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க முடிவெடுத்ததற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரை சந்தித்து கடிதம் அளித்தனர். இதனால், முதல்வர் பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதை சமாளிக்கும் வகையில், 19 எம்எல்ஏக்களையும், சட்டப்பேரவை கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி தகுதிநீக்கம் செய்ய கொறடா பரிந்துரைத்தார்.
இதை ஏற்று அவர்கள் 19 பேருக்கும் பேரவைத்தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். ஒருவாரத்துக்குள் தங்கள் பதிலை எம்எல்ஏக்கள் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பேரவைத்தலைவர், கொறடாவின் நடவடிக்கைகளுக்கு 19 பேரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சட்ட சிக்கல்கள்
கர்நாடகாவில் எடியூரப்பா அரசு தொடர்பான தீர்ப்பை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறிவிட்டதாக எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து, நிலைமையை சமாளிக்கவும், அடுத்த கட்ட நடவடிக்கையை சட்டச்சிக்கல்கள் இல்லாமல் எடுக்கவும் பேரவைத்தலைவர், சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகிறார்.
அதேநேரம், நீதிமன்ற வழக்கின் மூலம் அரசு கொறடாவின் நடவடிக்கையை எதிர்கொள்ள தினகரன் தரப்பும் தயாராகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT