Published : 20 Aug 2017 10:44 AM
Last Updated : 20 Aug 2017 10:44 AM

முதல்வரை வரவேற்று வைத்த பேனர் மீது மின்சாரம் பாய்ந்து 2 பேர் பரிதாப பலி

தஞ்சாவூர் அருகே அம்மா பேட்டையில் தமிழக முதல்வரை வரவேற்று வைக்கப் பட்ட பிளெக்ஸ் பேனரை சரிசெய்தபோது, மின்சாரம் பாய்ந்து இருவர் அதே இடத்தில் இறந்தனர்.

தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று மதியம் திருவாரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பங்கேற்க திருச்சியிலிருந்து கார் மூலம் சென்றார்.அவரை வரவேற்கும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம் அம்மா பேட்டை காவல் நிலையம் அருகே மெயின் ரோட்டில் அதிமுகவினர் வரவேற்பு பேனர்களை வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை விழா முடிந்து திருவாரூரிலிருந்து தமிழக முதல்வர் திரும்பி வரும்போது, அவரது பார்வையில் பட வேண்டும் என்பதற்காக வரவேற்பு பேனர்களை கிழக்கு நோக்கி திருப்பி வைத்தனர்.

இந்தப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பிளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்த பகுதிக்கு அருகில் சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பிளெக்ஸ் பேனர்களின் இரும்பு பிரேமில் உரசியதால் அதில் இருந்து மின்சாரம் பாய்ந்தது.

இதில் அம்மாபேட்டை அருகே உள்ள புளியக்குடி கீழத்தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணியரசன், பிச்சையன் மகன் கர்ணன், ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தனர். மேலும், அதே ஊரைச் சேர்ந்த சத்தியராஜ் படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x