Published : 13 Aug 2017 01:41 PM
Last Updated : 13 Aug 2017 01:41 PM
நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு சாத்தியமில்லை என்று கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஓராண்டுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றினால் ஒத்துழைப்பு அளிக்கத் தயார் என்று கூறியுள்ளார்.
சென்னை, தாம்பரத்தில் இது குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் ஓராண்டுக்கு விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளது. ஆனால் நீட் தேர்விலிருந்தே நிரந்தரமான விலக்கு சாத்தியமில்லை.
மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மத்திய அரசிடம் ஆலோசனை நடத்தினர். நீட் தேர்வில் தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பு இல்லை. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒராண்டு விலக்கு அளிக்க தயார். அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் இந்த வருடம் விலக்கு அளிக்க தயார். கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதை விளக்கி தனி அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் சட்ட முன் வடிவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மத்திய அரசு இந்த சட்ட முன்வடிவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது தொடர்பாக தமிழத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு இயற்றிய 85 சதவீத உள் இடஒதுக்கீட்டிற்கான அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து, உச்சநீதிமன்றமும் அதனை ஏற்றுக் கொண்டது. இதனால், காத்திருக்கும் மாணவர்களின் நிலை கேள்விக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் நிர்மலா சீதாராமன் ‘அவசரச் சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம்’ என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT