Published : 25 Aug 2017 08:12 AM
Last Updated : 25 Aug 2017 08:12 AM

பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தனது பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

இதுதொடர்பாக வழக்கறிஞர் பி.புகழேந்தி உயர் நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் மற்றும் முதல்வருக்கு எதிராக தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுகவில் பெரும் குழப்பம் நிலவியது. இந்தசூழலில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதல்வராக கே.பழனிசாமியை தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மையை நிரூபிக்கவும் அவர் உத்தரவிட்டார். அதன்படி முதல்வர் கே.பழனிசாமி, பிப்.18-ல் தனது தலைமையிலான அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

அதில் 122 அதிமுக எம்எல்ஏ.க்கள் முதல்வர் கே.பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. ஆனால் தற்போது அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசலால் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் 19 எம்எல்ஏ.க்கள் முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனக்கூறி தங்களது ஆதரவை கடந்த 22-ம் தேதி வாபஸ் பெற்றுள்ளனர். மேலும் இதுதொடர்பாக தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவிடமும் நேரடியாக தங்களது கடிதங்களைக் கொடுத்துள்ளனர். இதனால் முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு தற்போது பெரும்பான்மையை இழந்து விட்டது.

ஆனால் இதுவரை தமிழக ஆளுநர், தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரும் இதுதொடர்பாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். ஒரு அசாத்தியமான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டப்படி தனது கடமைகளை செய்யத் தவறி விட்டார். ஆளுநரின் இந்த நடவடிக்கை தேவையற்ற குதிரை பேரத்துக்குத்தான் வழிவகுக்கும்.

இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் நம்பி்க்கை வாக்கெடுப்பு நடத்த தமிழக முதல்வருக்கு, ஆளுநர் உத்தரவிட உயர் நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x